Sunday, 20 March 2016

Sivalaya Ottam

முன்னாள் திருவிதாங்கூர் (தற்போதைய கன்னியாகுமாரி) மாவட்டத்தின் விளவங்கோடு, கல்குளம் (பத்மநாபபுரம்) தாலுக்காக்களில் உள்ள 12 சிவாலயங்களுக்கு சிவராத்திரியன்று பக்தர்கள் ஓடிச்சென்றே வழிபடுகின்றனர். இந்த சிவாலய ஓட்டம் சுமார் 100கி.மீ பாதையாகும். ஒரு வாரம் நோன்பு நோற்று, காவியணிந்து, இடுப்பில் விபூதிப்பையைக் கட்டிக்கொண்டு, கையில் விசிறி வைத்துக்கொண்டு, "கோவிந்தா, கோபாலா" என்று ஹரி நாமத்தை ஜபித்துக்கொண்டு 12 சிவாலயங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆறு, குளங்களில் குளித்து ஹரனை வழிபடுவது ஒரு ஆச்சரியமான விஷயம். சிவாலய ஓட்டம் தொடங்கியதற்கு 3 புராணக் கதைகள் கூறப்படுகின்றன.
1. புருஷாமிருகம் http://adhvaitha.blogspot.in/2008/07/shivalayottam.html
2. வியாக்கிரபாத முனிவர்
3. சூண்டோதர அரக்கன் http://temple.dinamalar.com/news_detail.php?id=39909
புராணம் எப்படியிருப்பினும், இக்காலத்திலும் காலணி கூட அணியாமல் 2 மாரத்தான் ஓட்டப்பந்தய தூரத்தை ஓடியே கடப்பது என்பது வியத்தகு செயலாகும்.

கருவறையிலிருந்து கல்லறை வரை நாம் ஒடும் வாழ்க்கை ஓட்டத்தையும், இந்தப் புனித சிவாலய ஓட்டத்தையும் தொடர்பு படுத்தி எழுதப்பட்ட பாடல் இது.

ராகம்: வசந்தா

ஓடித் தேடி நித்தம் பிழைப்போரே
ஓடிப் பணிவீர் அரன் ஆலயத்தே                    (ஓடித் தேடி நித்தம் பிழைப்போரே…)

கருச்சிறை விட்டு வந்தநாள் முதல்
வெறும் காசுபணம் சுகம் நிம்மதி நாடி           (ஓடித் தேடி நித்தம் பிழைப்போரே…)

முன்சிறை1 மகாதேவரில்1,2 தொடங்கி
பன்னிரு சிவாலயம் ஒருநாளில் ஓடி
கோவிந்தன் கோபாலன் நாமமே கூறி
போகின்ற வழிக்கு புண்ணியம் சேர்க்க        (ஓடிப் பணிவீர் அரன் ஆலயத்தே)

பத்திரன்3 நந்தி4 தீம்பிலான்5 கிராத-
மூர்த்தி6 கல் குளத்து  நீல கண்டன்7
காலகாலன் 8 சடை9யிரு கோடினன்10,11
மாலன் அரன் இணை நட்டாலத்தனை12     (ஓடிப் பணிவீர் அரன் ஆலயத்தே)




மேல் ஓட்டில் (superscript) கொடுக்கப்பட்ட எண்கள் 12 சிவாலயங்களைக் குறிப்பன. அவையாவன -

  1. திருமலை மகாதேவர் கோவில், முன்சிறை
  2. மகாதேவர் கோவில், திக்குறிச்சி
  3.  வீரபத்திரர் கோவில், திற்பரப்பு
  4. நந்தீஶ்வரர் கோவில், திருநந்திக்கரை
  5.  தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், பொன்மனை
  6. கிராதமூர்த்தி கோவில், பன்னிப்பாகம்
  7. நீலகண்டர் கோவில், கல்குளம்
  8.  காலகண்டர் (காலகாலர் கோவில், மேலாங்கோடு
  9.  சடையப்பர் கோவில், திருவிடைக்கோடு
  10. பரிதிப்பனி மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு
  11. மகாதேவர் கோவில், திருப்பன்றிக்கோடு
  12. சங்கர நாராயணர் கோவில், திருநட்டாலம்

No comments:

Post a Comment