Saturday, 19 September 2015

Positive  destruction of Shiva

This song is set to a thamizhp pann with a carnatic raga equivalent

27/05/15 ராகம்: கேதாரகௌளை (பண்: காந்தார பஞ்சமம்)

அழிக்கும் கடவுளெனப் பெயர்நீ பெற்றனை
அழித்தவை எண்ணற அரசிவ சங்கரா

திரிபுரச் செருக்கை நகைத்தே எரித்தனை
விரிகுழற் சடையில் ஆற்றைத் தாங்கினை
எரிகண் நோக்கால் காமனைச் சுட்டனை
திரிசூல மேந்தி முக்காலம் வென்றனை

உயிரறு விடத்தை மிடற்றில் அடக்கினை
பயிரவி மமதையை ஆடியே ஒடுக்கினை
கயிறெறி காலனைக் காலால் உதைத்தனை
பயிர்நெல் வேலியால் வெள்ளம் தடுத்தனை

மருள் நீக்கியரின் சூலையைத் தீர்த்தனை
இருள்திரை சங்கரர் மனத்தில் விலக்கினை
தருநிழல் மோனமாய் அஞ்ஞான மகற்றினை
கருத்தினில் கொண்டவர் துயரம் துடைத்தனை

குறிப்பு
ஆறு: கங்கை
மிடறு: கழுத்து, தொண்டை
பயிரவி: காளி
மருள் நீக்கியர்: அப்பர் என்று பின்னால் அழைக்கப் பட்ட திருநாவுக்கரசரின் இயற்பெயர் 
சூலை: வயிற்று வலி கொடுக்கும் நோய்

தருநிழல்: ஆலமர நிழல்

No comments:

Post a Comment